நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறை! - 2046-க்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு..!

 
1

90 வயதை எட்டிய ஒரு மூத்த குடிமகளும் அவரது மகளும் தொடுத்திருந்த ரூ.20 கோடி மதிப்பிலான அவதூறு வழக்கை, பம்பாய் உயர் நீதிமன்றம் 2046-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்தது.

மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு நலச்சங்கத்துக்கு எதிராக, 2015ல் தாரிணிபென், மற்றும் அவரது மகள் தேசாய், ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், 'சங்கத்தைச் சேர்ந்த கில்கில்ராஜ் பன்சாலி மற்றும் பிறரின் செய்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால், அவர்கள் 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, கோரப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், பலமுறை இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றது. எதிர்தரப்பினர் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தும், அதை தாரிணி ஏற்காததால் வழக்கு விசாரணை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ஜிதேந்திர ஜெயின் முன் சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உள்ள மனுதாரர்களின் தனிப்பட்ட ஈகோ, இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறது. இது நியாயமான வழக்கல்ல; ஈகோ எனப்படும் அகங்காரங்களின் மோதல். உண்மையில் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் எத்தனையோ காத்திருக்கும் நிலையில் இத்தகைய பிடிவாதமான வழக்குகளால், நீதிமன்ற நடைமுறை பாதிக்கப்படுகிறது.மனுதாரர்கள் மூத்த குடிமக்கள் என்பதற்காக, இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. அவர்களின் பிடிவாதமே இந்த தாமதத்திற்கு காரணம்-.

எனவே, இந்த வழக்கு விசாரணையை 20 ஆண்டுகளுக்கு பின், 2046ல் விசாரிக்க பட்டியலிட உத்தரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டும், அதற்கு முன்னதாக இந்த வழக்கு விசாரிக்கப்படாது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.