இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்..!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதன்படி, 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது.
இந்நிலையில், இந்த தடை அமலுக்கு வந்துள்ளதை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை காசிமேடு, துறைமுகம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 20,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை கடலில் இருந்த விசைப்படகுகள் அனைத்தும் அதிகாலையிலேயே கடைக்கு திரும்பின.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைக்குளம், தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம், வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மீன்பிடிக் காலக்கட்டத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுதுபார்ப்பது, வலைகளை புதுப்பிப்பது, மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்.
இந்த தடை என்பது நடுக்கடலில் சென்று ஆழமான பகுதிகளில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு மட்டுமே பொருந்தும். சிறிய ரக ஃபைபர் படகுகள், கட்டுமரம் மூலமாக கடலோரங்களில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம்.



