மீனவர்களை திரட்டி தவெக ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு?

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 14 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனை அடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.