வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. தஞ்சையில் முதல் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே நேற்று 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்மாவட்டத்தில் இதுவே முதல் உயிரிழப்பு ஆகும்.
தஞ்சை மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் 85 பேர் குணமடைந்து விட்டதாகவும் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.