4 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்தரவதை- தந்தை கைது
சென்னையில் நான்கு வயது சிறுமிக்கு காலில் சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் எண்ணூர் போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணலி புதுநகரை சேர்ந்த சகிலா என்பவரின் மகன் திலீப்(24). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மீன் பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்து விட்டார். மகன் இறந்து விட்டதால் மருமகள் ஸ்கிரீன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்யும் பாண்டிச்சேரியை சேர்ந்த ராஜா (34) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தையை பார்க்க வேண்டும் என்று மருமகளிடம் கேட்டபோது அழைத்து வர மறுப்பு தெரிவித்ததால், நேரில் சென்று குழந்தையை பார்த்த போது குழந்தையின் இடது காலில் சூடு வைத்த தீக்காயம் ஏற்பட்டதை பார்த்து குழந்தையிடம் விசாரித்துள்ளார். ராஜா அப்பா சூடு வைத்ததாகவும்,வேறு யாரும் கேட்டால் குக்கரில் சுட்டுக் கொண்டதாக கூறும்படி கூறியதாகவும் சிறுமி பாட்டியிடம் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து பாட்டி சகிலா ராயபுரத்தில் உள்ள சைல்டு ஹெல்ப்லைன் மூலமாக தகவல் தெரிவித்தார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தற்போதைய கணவர் தனது நான்கு வயது பேத்தியை காலில் சூடு வைத்து காயம் ஏற்படுத்தியதாக எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மருமகளின் இரண்டாவது கணவர் ராஜாவை விசாரணை செய்து பாதுகாப்பில் இருக்கும் குழந்தையை கொடுமைப்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.


