உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது - ஈபிஎஸ் பங்கேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று பேரவை தொடங்கியதுமே அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டப்பேரவையை நடக்க விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது.#பயமா_ஸ்டாலின்#Resign_Stalin pic.twitter.com/7fLahz9Rdy
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) June 27, 2024
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேச அனுமதிக்காததை கண்டித்தும், நடப்பு கூட்டத்தொடர் முழுமைக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளதை கண்டித்தும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், திமுக அரசு இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பதாகைகளுடன் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.