மோடிக்கு எதிராக வேட்புமனு! போராடிய விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்

 
விவசாயிகள்

செங்கல்பட்டில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதமர் மோடி போட்டியிடும் பனாரஸ் தொகுதியில் அவருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலை கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் ஏறி உள்ளனர்

அப்போது விவசாயிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் திடீரென டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், தங்களுக்கு இருக்கைகள் அமைத்து தர கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இருக்கைகள் ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின்பு இரயிலில் ஏறினர். 

இந்நிலையில் கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயில் அடுத்தபடியாக செங்கல்பட்டு இரயில் நிலையம் வந்தடைந்த நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் ரயில்வே போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இரயில் உள்ளே இருந்த சக பயணிகள் விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் ஒவ்வொரு இடத்திலேயேயும் இரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தாங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை என கூறி விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு இரயில் 1 மணி நேரம் 15-நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. அந்த இரயிலில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ஏறவில்லை. அவர்களுக்காக சீட் ஏற்பாடு செய்யப்படாத நிலையில்  செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் காத்திருந்தவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நகராட்சி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.