மகள் உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு : உருவபொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தினர்..!

 
1 1

மத்தியப் பிரதேசத்தில் தனது காதலைத் தேடிச் சென்ற மகளுக்கு, அவர் உயிரோடு இருக்கும்போதே குடும்பத்தினர் ஈமச்சடங்கு நடத்திய நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான கவிதா என்ற இளம்பெண், சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறிக் காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், அவர் தனது காதலனை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

தங்கள் மகள் தங்களுக்குத் தெரியாமல் எடுத்த இந்த முடிவைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவர் தங்களுக்கு மகளாக இருந்து இறந்துவிட்டதாகக் கருதி அடையாளப்பூர்வமான இறுதிச்சடங்குகளைச் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, மாவினால் கவிதாவின் உருவப் பொம்மையைச் செய்து, அதனைப் பாடையில் ஏற்றி ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பாரம்பரிய முறைப்படி சிதை அடுக்கி, உருவப் பொம்மைக்குத் தீ மூட்டி இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, "மகளின் இந்த முடிவால் எங்கள் குடும்பம் முற்றிலும் சிதைந்துவிட்டது, இது என் வாழ்நாளில் மிகவும் வேதனையான தருணம்" என உருக்கமாகத் தெரிவித்தார். மகளைப் பிரிந்த துயரத்திலும் ஆத்திரத்திலும் குடும்பத்தினர் நடத்திய இந்த வினோத இறுதி ஊர்வலம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.