அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை- மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த குடிநீர் தொட்டியை தான் மாணவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மதிய உணவுக்காக இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்து மதிய உணவை குழந்தைகளுக்காக தயார் செய்யும் போது குடிநீரில் இருந்து துர்நாற்றம் அடித்தவுடன் மாணவர்களுக்கு மதிய உணவு வேறு குடிநீரில் தயார் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பள்ளியின் உதவி தலைமையாசிரியர் காந்திராஜ் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் குடிநீர் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அவர்கள் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார். மேலும், பயன்படுத்தப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியில் பாத்திரம் மற்றும் அரிசி மட்டுமே கழுவி வந்ததாகவும், துர்நாற்றம் அடித்ததன் காரணமாக ஆய்வு மேற்கொண்டதில், அதில் அழகிய முட்டையை காகம் கொண்டு வந்து போட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் புதிய குடிநீர் தொட்டியை நாளை முதல் பயன்படுத்தவும் பழைய பயன்படுத்தாமல் உள்ள குடிநீர் தொட்டியை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்