பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு

 
பெட்ரோல்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல் மற்றும் டீசல்  விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கும் எனவும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து  உயர்த்தி வருகிறது. இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமான்ய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள். ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.