அடுத்து சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ... ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்..

 
EX MLA Sathya

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்திற்கு அதிகமாக 468 சதவிகிதம் சொத்துக்குவிப்பு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2011 - 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி கவுன்சிலராகவும்,  2016 - 2020ஆம் ஆண்டு வரையில்  தி. நகர் தொகுதி சட்டமன்ற  உறுப்பினராக இருந்தவர் சத்தியநாராயணன்.  இவர் தனது பதவிக் காலத்தின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக ராயபுரத்தை சேர்ந்த அரவிந்தக்‌ஷன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்துள்ள புகார் மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ சத்யா  2016-ம் ஆண்டு தேர்தலின்போது சமர்ப்பித்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் 7 கோடியே 53 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும்,  அவரது மனைவி ஜெயசித்ரா 1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 582 ரூபாய் சொத்துக்கள் வைத்திருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதேபோல் 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது சத்யாவின் மொத்த சொத்து பதிப்பானது 17 கோடியே 17 லட்சத்து 95 ஆயிரத்து 322 ரூபாய் எனவும்,  அவரது மனைவியின் சொத்து மதிப்பு 2 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 534 ரூபாய் எனவும் தெரிவித்திருக்கிறார். அதோடு தனது மகளுக்கு ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் கடன் வழங்கி இருப்பதாகவும்,  ஜேசிபி வாகனம், 2 சொகுசு கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் இருப்பதாகவும் சமர்ப்பித்திருக்கிறார்.

alternative image

இதனைக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சத்யா எம்.எல்.ஏ வாக இருந்த காலக்கட்டத்தில் மட்டும் 11கோடியே 72 லட்சத்து, 50 ஆயிரத்து 425 ரூபாய் சொத்துக்களைவாங்கியிருக்கிறார். அதோடு 1.29 கோடியில் சொகுசு கார்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியிருக்கிறார். ஆனால் 2016 ஆம் ஆண்டு அவரது குடும்பத்தினரின் மொத்த வருமானம் 2 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 899 என்றும், செலவீனம் 92,67,533 ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப் பார்த்தால் செலவீனம் போக, அவரிடம் ஒரு கோடியே 85 லட்சத்து35 ஆயிரத்து, 266 ரூபாய் மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால் சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அதிகமாக 12 கோடிகும் அதிகமான சொத்துக்களை வாங்கியுள்ளனர். அதாவது அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக 468% சொத்துக்களை சேர்த்திருப்பதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.