ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் - கே.எஸ்.அழகிரி..

“ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழ்நாடு அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு கொடுத்த உறுதி மொழியை 80% சதவீதத்திற்கும் மேல் இரண்டு ஆடுகளிலேயே நிறைவேற்றி இருக்கிறது. மக்களுடைய அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எனவே மக்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள். “ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். நாங்கள் கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாக இருக்கிறோம். எங்களை எதிர்த்து நிற்கிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சஞ்சலத்தில் இருக்கிறார்கள்; அவர்களால் அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. தன்னம்பிக்கை இல்லாத அதிமுக கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்; எங்களது கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும்.
‘மூன்றாவது அணி இருக்கக் கூடாது; காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது; தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என்பது சந்தர்ப்பவாதத்தை உருவாக்கிவிடும்’- இந்த மூன்று வார்த்தைகளும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முத்தான வார்த்தைகள். இது இந்தியா முழுவதும் பிரதிபலிக்கிறது எதிரொலிக்கிறது; வரவேற்க கூடிய ஆழம் நிறைந்த உறுதியான ஒரு கருத்து.. இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை; ஆனால் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கை என்ன? பொருளாதார உதவியாளர்கள் பிரதமர் மோடிக்கு என்ன பாடம் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இந்த கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் செய்த தவறு என்ன ?, என்ன ஊழல் நடைபெற்றிருக்கிறது; அந்த ஊழலினால் சிசோடியா அடைந்த நன்மை என்ன மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அடிப்படை ஆதாரம் இருப்பதாக கூறி அவரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட பல அடிப்படை ஆதாரங்கள் அதானி ஊழல் வழக்கில் இருக்கிறது. ஏறக்குறைய ரூ. 45 லட்சம் கோடி மக்களுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் சிட்டுக்குருவி போல் சேகரித்த சேமிப்புகள் கரைந்து போய் காணாமல் போயிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களுடைய பணம் காணாமல் போய் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் அதானிக்கு இதில் நஷ்டம் இல்லை; நாட்டிற்கு தான் இழப்பு.. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மௌனம் காக்கிறார். அதானியை ஏன் கைது செய்யவில்லை. ஏன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனை இயல்பான சந்தை நிலவரம் என்று சொல்லிவிட முடியாது. இதை அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதானியும் அவருடைய நிறுவனமும் தவறு செய்திருக்கிறது. ஆனால் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அதானியை விட ,பாஜக செய்தது தேச துரோகம். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி டெல்லி அலங்கரிக்கும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை” என்றும் கூறினார்.