இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

 
evks elangovan evks elangovan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டார். இதேபோல் நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிட்டனர். நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 02ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று காலை 11 மணிக்கு எம்.எல்.ஏவாக பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்துள்ளார். தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.