ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தபால் வாக்கு முடிவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பு 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 398 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மறுபக்கம் மின்னணு வாக்குப்பதி இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை 6வது சுற்றை எட்டியிருக்கும் நிலையில் தபால் வாக்குகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. மொத்த தபால் வாக்குகள் 398 ஆகும். இதில் காங்கிரஸ் 250 வாக்குகளும், அதிமுக - 104 வாக்குகளும், நாம் தமிழர் - 10 வாக்குகளும் பெற்றுள்ளன. சமாஜ்வாதி 2 வாக்குகளும், தேமுதிக, நோட்டா தலா 1 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் 25 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளில் 67 சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.