ஈரோடு இடைத்தேர்தல் : 6000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கூட்டணி முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 6,000 அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை 16 மேசைகளில் மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். 6,000 அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 12,803 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 4,324 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் 585 , தேமுதிக சார்பில் ஆனந்த் 17வாக்குகளும் பெற்றுள்ளனர்.