ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பொங்கல் நாளிலும் வேட்புமனு தாக்கல் நடைபெறும்: தேர்தல் அலுவலர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான டாக்டர் மனீஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 3 பறக்கும் படை தற்போது பணியமர்த்தப்பட்டனர். கூடுதலாக பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகள் விளம்பரம் 24 மணி்நேரத்தில் பொதுஇடங்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும். 48 மணி நேரத்தில் தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சி் விளம்பரங்கள் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களிலும் வேட்பு மனு தாக்கல் இருக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர்.
சி விஜில் ஆப் மூலமாக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை திறக்கப்பட்டு Toll free எண் அறிவிக்கப்படும்” என்றார்.