எடப்பாடி பழனிசாமியின் வசமானது அதிமுக - தொண்டர்கள் கொண்டாட்டம்

 
admk

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசம் சென்றுள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது. 

supreme court

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

admk

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசம் சென்றுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வந்துள்ளதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.