சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு..!
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரித்து வரும் சூழலிலும், அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதுடன், ஆங்கில வழிக் கல்வி, இலவச பாடப்புத்தகம் , நோட்டுப்புத்தகம், சீருடை, பை என மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. `இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மொத்தமுள்ள 417 மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்தாண்டு 6,000 மாணவர்கள் சேர்ந்த நிலையில், தற்போது 16,490 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக எல்.கே.ஜி, யு.கே.ஜி.யில் 7,500 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.


