பொறியியல் கலந்தாய்வு : பொதுப்பிரிவு முதல் சுற்றில் 30,264 மாணவர்கள் பங்கேற்பு..

பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களில் கீழ் இயங்கும் 433 கல்லூரிகளில் உள்ள 1,79, 938 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. மே மாதம் 6ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசை பட்டியல் ஜூலை 10 ந் தேதி வெளியிட்டப்பட்டது.
இதுவரை நடைபெற்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 836 மாணவர்கள் இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர். முதல்சுற்றில் 30,264 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். அதாவது இன்று தரவரிசை எண் 1 முதல் 26,654 வரை மாணவர்கள் பொதுப்பிரிவில் கலந்துகொள்கின்றனர். அதேபோல் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் 1,343 மாணவர்களும், கட்-ஆஃப் மதிப்பெண் 200-179.00 வரை 2,267 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களும் இன்று கலந்துகொண்டுள்ளனர்.