டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைநடத்திவருகின்றனர்.
சென்னை உட்பட தமிழக முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எப் உதவியுடன் இன்று காலை முதலே தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெங்கட ரத்தினம் தெருவில் மின் வாரிய அதிகாரி காசி என்பவரின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மின்வாரிய அலுவலகத்தில் கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதே போல ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அரசு மது ஒப்பந்ததாரர் எஸ்.என் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான snj குரூப்ஸ் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் உதயநிதிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஜெயமுருகன் ஆவார். அவருடைய எஸ்.என்.ஜே மதுபான நிறுவன அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மதுபான ஆலை மற்றும் சர்க்கரை ஆலையை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்கது. எழும்பூர் CMDA வளாகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாம்பலம் வெங்கட்நாராயணன் சாலை தணிகாசலம் ரோடு சந்திப்பில் உள்ள மதுபான நிறுவனமான(kals group) சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல சென்னையில் ஐந்து இடங்கள் உட்பட கரூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கார்களில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை மது மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் விதி முறைகேடு தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்க துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புது வழக்கை பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்புடைய அரசு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து, தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை அமலாக்கத் துறையினர் பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.