மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!!

தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல்லில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டிலும், புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் வீட்டிலும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், முகத்துப்பட்டிணத்தில் உள்ள அவரது வீடு, கே.எல்.கே எஸ் நகரில் உள்ள ஆடிட்டர் முருகேசனின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை தொடர்கிறது.நாமக்கல் குமரிப்பள்ளத்தில் உள்ள அரசு மணல் இருப்பு கிடங்கிலும் 2வது நாளாக சோதனை தொடர்கிறது. 2 கார்களில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் மணல் சேமிப்புக் கிடங்கில் உள்ள அலுவலகத்தில் 2வது நாளாக சோதனயிட்டு வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதா?, எவ்வளவு மணல் கிடங்கில் உள்ளது? எவ்வளவு மணல் ஆன்லைன் மூலம் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மணல் கிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். திருத்தணி, கரூரில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.