உண்மையை மறைக்க என்கவுன்டர்.? திமுகவினர் 3 பேருக்குத் தொடர்பு.!

 
1

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தனர். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய பங்கு வகித்த திருவெங்கடம் போலீஸ் காவலிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தத் திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.