லிப்ட் ஏறும் போது தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு!

ஈரோட்டில் லிப்ட் ஏறும் போது தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு திண்டலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் துணிகளை சலவை செய்பவர் 69 வயது தொழிலாளி சுப்பிரமணி. வழக்கம் போல் வீட்டு உரிமையாளர்களிடம் துணிகளை பெற்று கொண்டு 4-வது மாடியில் இருந்து லிப்டில் கீழே செல்ல முயற்சித்துள்ளார். லிப்ட் 4-வது தளத்திற்கு வராமலேயே கதவுகள் திறந்ததாக கூறப்படுகிறது.
லிப்டில் நுழைவதாக கருதி உள்ளே சென்ற சுப்பிரமணி லிப்ட்டின் மேல் புறத்தில் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் காவல் துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சடலமாக கிடந்த சுப்பிரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டடம் கட்டப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில் நல்ல பராமரிப்பில் உள்ள லிப்ட்டில் தொழிலாளி எப்படி விழுந்தார் என்பது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.