‘எல்லாருக்கும் எல்லான் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம்..’ - முதலமைச்சர் ஸ்டாலின்..
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மதுரை வளையங்குளம் பகுதியில் பெந்தகோஸ்தே திருச்சபைகளின் 4ம் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைதான் நமது அரசு நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் என்று கூறிய முதலமைச்சர், அரசின் திட்டங்களால் மக்கள் பயனடைந்து , அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படும் போது தமக்கு மனநிறைவு ஏற்படுவதாக தெரிவித்தார்.
கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில், வளர்ச்சி, மேலாண்மை, மகளிர், மேம்பாடு, குழந்தைகள் நலன், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆகும் பணிகளை செய்து வருவதாகவும் கூறினார். குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் , தேவாயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட அதிக நம்பிக்கையை இந்த 20 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம் என்றும், இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு; அந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது உண்மை; மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுக்கள், அதிகம் உழைக்க தூண்டுகோலாக அமையும் என்று கூறினார். இந்த விழாவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உட்பட 6000 மேற்பட்டோர் பங்கேற்றனர்.