தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை! இன்றைய நிலவரம்
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.20ல் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ. 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (10-12-2023) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (11-12-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது.

வட மாநிலங்களில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து அங்கு முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் வருவதால் கேக் தயாரிக்க முட்டைகள் தேவைப்படுகிறது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வு க்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். கடந்த 7 நாட்களில் முட்டை விலை 55 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


