கல்வி விருது விழா- பாதுகாப்பு கேட்டு விஜய் மனு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா ஜூன் 28ல் நடைபெறுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது.
இதில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு 9 மணிக்குள் வந்து அடைகிறார். தொடர்ந்து ஒன்பது மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்குள் முடிவடை இருக்கிறது. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற இருக்கிறார்.
இந்நிலையில் விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருக்கும் மாணவர்களுடன் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவ்விழாவில் 750 விருதாளர்கள் உட்பட 3,500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது விழாவில் கலந்து கொள்ள 21 மாவட்டங்களில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள் அழைத்து வர ஏற்கனவே சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு தமிழக வெற்றி கழகத்தின் முழு செலவில் அவர்களை அழைத்து வந்து மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் திருவான்மியூர் தனியார் திருமண மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர். எனவே நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, தவெக சார்பில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.