தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்- கைவிரித்த எடப்பாடி பழனிசாமி?

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.ம.மு.க, பா.ஜ.க,பாமக .விசிக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 2000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த இணைப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு யாருடைய ஆட்சி காலத்தில் தாரைவார்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். சென்னை உள்பட 38 மாவட்டங்களிலும் கமிஷன் நடைபெறுகிறது. திமுக மாவட்ட செயலாளர் அதிகாரிகளை மிரட்டுவதும் நடைபெறுவது இந்த ஆட்சியில்தான்.
சீமானுடைய பிரச்சனை தனிப்பட்ட நபருடைய பிரச்சினை, அதனை பேசுவது சரி இல்லை. தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் கூட்டணியில் இருக்கும் போது அதிமுக பாராளுமன்றத்தை முடக்கியது ஆனால் இன்று மத்திய அரசை திமுக எதிர்க்காது . தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருப்பதால் அப்பொழுது கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் எப்போது சொன்னோம்? தேவையின்றி யார், யாரோ சொல்வதை வைத்து எங்களிடம் கேட்க வேண்டாம். திமுகவை வீழ்த்துவதே குறிக்கோள் ! அதற்குரிய வகைகள் கூட்டணி அமைக்கப்படும், நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தங்களது கருத்து தெரிவிக்கப்படும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்குவது இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது, திமுக ஆட்சியின் அவலங்களை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. எங்களைப் பற்றி மட்டுமே விவாத மேடை நடத்தி வருகின்றன” என்றார்.