எடப்பாடி அரசு டூ விஜய் அரசு! யார் இந்த புதிய தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்?

 
tn govt

சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்ததால் அந்த பதவி காலியானது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை தலைமை வழக்கறிஞராக நியமித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், விரைவில் அவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நாராயண், தனது பள்ளி கல்வியை பீகார் மாநிலத்தில் இருந்த ராஞ்சியில் முடித்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப்படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தை மேம்படுத்த பணியாற்றிய குழுவில் இடம்பெற்ற பிரபல வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் இவரது தாத்தா ஆவார். மத்திய அரசின் தற்போதைய அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபாலும் இவரது உறவினராவார். வரலாற்று ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான சர்தார் கே.எம்.பணிக்கர் தாய்வழி தாத்தா ஆவார்.

தொழிலாளர், அரசியலமைப்பு, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் குறித்த வழக்குகளில் ஆஜரானவர். 2004-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி திறம்பட வாதம் செய்தவர்.

இந்திய சட்ட நிறுவனத்தின் சென்னை மண்டல செயற்குழு உறுப்பினராக இந்திய தலைமை நீதிபதியால் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் பொதுக்குழு உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தொன்மையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேசனின் தலைவராக இருந்தவர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

அதன் பின்னர் 2021-இல் திமுக ஆட்சி வந்தவுடன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தார். இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததை அடுத்து, தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.