மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

 
eps

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தடைந்தார். மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து பிற்பகலில் சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர் சென்று அங்குள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சிவகங்கையில் எம்.ஜி.ஆர் வேலுநாச்சியார் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார். பின்னர் மாலை 6 மணியளவில் சிவகங்கை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றுகிறார்.