கருமுத்து கண்ணன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 
ep

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதாவது: மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராக கல்வித் தொண்டாற்றியவரும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தக்காராக பல்வேறு ஆன்மீக பணிகளை செய்தவரும், மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவருமான  உயர்திரு திரு. கருமுத்து தி. கண்ணன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சித்திரை வீதிகளை புனரமைப்பதிலும், செயற்கரிய அறசெயல்கள் பல செய்து நீங்கா புகழ்பெற்ற திரு.கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.