அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கட்சியின் சட்ட விதியின் படி பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறாது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமான பெறலாம் என்றும் , விதிமுறைகளை பின்பற்றி விருப்பமுனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினமே வேட்ப்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக காலை 10.30 மணியளவில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.