புதுக்கோட்டையில் 24 மணிநேரமும் சட்டவிரோத மதுவிற்பனை- ஈபிஎஸ் கொந்தளிப்பு

 
edappadi palanisamy

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தி 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளித்த நிலையில்,  தஞ்சாவூர் மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிரே உள்ள அரசிடமிருந்து உரிமம் பெற்று தனியாரால் நடத்தப்படும் பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி குடித்ததில் இருவர் உயிரிழந்தனர். விசாரணையில் மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

eps

இந்நிலையில் தற்போது புது பிரச்சனையாக புதுக்கோட்டையில் 24 மணிநேரமும் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெற்றுவருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விழுப்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளச்சாராயத்தால் 23 பேர் பலியான சுவடே இன்னும் மறையும் முன்னர்,நேற்று தஞ்சாவூரில் அரசு பாரில் சட்டவிரோதமான மது விற்பனையில் இருவர் மரணம்‌ அடைந்துள்ள சூழ்நிலையில், இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு அனுமதி பெற்ற மதுபான பாரில் சிறிதும் அச்சமின்றி, கந்தவர்கோட்டை காவல் ஆய்வாளரின் முழு ஒத்துழைப்போடு அவர்களின் நேரடி கண்காணிப்பில் 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது.



இதை கண்டு சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் கொள்கின்றனர். மக்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் அக்கறையின்றி தங்களுக்கு கமிஷன் கிடைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்த விடியா திமுக அரசு இன்னும் எத்தனை உயிர்பழிகளை வாங்கத் துடிக்கிறது எனத் தெரியவில்லை, ஆகவே இந்த குடும்ப ஆட்சியின் பொம்மை முதல்வர் இதுகுறித்தாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.