அரசியலில் படிப்படியாக ஏறி தான் இந்த நிலைக்கு வர முடியும் - எடப்பாடி பழனிசாமி
அரசியலில் தாம் அமைதியாக இருப்பதால் தனது உழைப்பு யாருக்கும் தெரியவில்லை என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் எனும் பெயரில் புதியதாக தொடங்கப்பட உள்ள தொண்டு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி தொண்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடாது, அது தனக்கு கிடைத்துள்ளது. திரைப்படத்தில் எளிதாக ஜொலித்து விடலாம் ஆனால் அரசியலில் ஜொலிப்பது கடினம். தெருவில் நின்று அனைவரிடமும் பேசி,
ஒவ்வொரு படியாக ஏறி தான் இந்த இடத்திற்கு வர முடியும். அரசியலில் தாம் அமைதியாக இருந்ததால் தனது பணி யாருக்கும் தெரியவில்லை. எடப்பாடி தொகுதியில் யாரிடம் கேட்டாலும் தன்னை பற்றி அனைவரும் சொல்வார்கள். 10 முறை சட்டமன்ற தேர்தலில் தாம் போட்டியிட்டுள்ளதாக கூறி தனது உழைப்பு அந்த அளவு பெரியது. உதவி கேட்டவர்கள் பெயரை தாம் வெளியே சொல்வதில்லை. இதுவரை சொல்லியதில்லை, இனிமேலும் சொல்ல மாட்டேன்” எனக் கூறினார்.