தாயின் சிகிச்சைக்கு உதவிக்கேட்ட இளைஞருக்கு அண்ணன் ஸ்தானத்தில் உதவிய முதலமைச்சர்!
இளைஞர் ஒருவர் தனது தாயின் சிகிச்சைக்காக டிவிட்டரில் உதவி கோரியதை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
வேலூரை சேர்ந்த சந்துரு என்ற இளைஞர் தனது தாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே டயாலிசிஸ் நோயாளி என்பதால் உடனடியாக டயாலிசிஸ் மேற்கொள்ள உதவ வேண்டும், எனவும் முதலமைச்சரை டேக் செய்து டிவிட்டரில் உதவி கோரினார்.
கவலை வேண்டாம் @ItzmeChandru தம்பி!
தங்களது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுதியுள்ளேன். https://t.co/eeI8ZVs4dh
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 7, 2020
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து உதவி கோரிய நபரின் தாயாருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவர் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டர் வாயிலாக உதவி கேட்கப்பட்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு அந்த இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.