அதிகாரிகள் எங்கே?- கடுப்பான அமைச்சர் துரைமுருகன்
சட்டப்பேரவையில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தினால் அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடும் அதிருப்தியை பதிவு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தினால், அவை நிகழ்வை குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பாரம்பரியமிக்க இந்த அவையை மதிக்கும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகள், அவர்களுக்கான இருக்கையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். துரைமுருகன் அறிவுறுத்தி 10 முதல் 15 நிமிடங்கள் கடந்த பின்பும் அதிகாரிகள் யாரும் வராததை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர் பி உதயகுமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, கேள்வி நேரத்தின் போது எந்தெந்த அமைச்சர்களின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறுகிறதோ அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.