"பெரியாரை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிகளே"- துரை வைகோ

பெரியாரை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிகளே என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., “ஈரோடு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சந்திரகுமாரை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். இது தந்தை பெரியாரின் மண். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு சமூக நீதியில் வழிகாட்டுகின்ற கலங்கரை விளக்கமாக தந்தை பெரியார் திகழ்ந்தார். தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேற, கல்வி வளர்ச்சி பெற, அடித்தளத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான். தந்தை பெரியாரை கேவலப்படுத்திய ஈனப்பிறவிகளுக்கு தந்தை பெரியார் மண்ணில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இந்தியா கூட்டணி மட்டுமல்ல அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பொது வேட்பாளராக கருதி சந்திரகுமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வேங்கைவயல் பிரச்சனையில் விசாரணைக்கு பிறகு தகுந்த ஆதாரங்களுடன் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் உயர்நீதி மன்றம் எடுக்கும் முடிவு இறுதியானது. அந்த கிராமத்தில் சாதிய ரீதியான வன்மம் எதுவும் கிடையாது. சமூக நீதிக்காகவும், சமூக வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பெண்ணுரிமைக்காக பாடுபட்ட தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிகள் தான். பரந்தூர் சென்று விவசாயிகளை சந்தித்த விஜய் விமான நிலையத்திற்கு மாற்று நிலத்தை கண்டறிந்து சொல்ல வேண்டும்.
ஆளுனர் ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ரவி மட்டுமல்ல, பாஜக அல்லாத மாநில அரசுகள் உள்ள ஆளுநர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. மாநில அரசுகளுக்கு எதிராக நடந்து கொள்வதும் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதும் ஆளுனர்களின் செயலாக உள்ளது. தமிழ்நாட்டில் எட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் கிடையாது. மாநில அரசுக்கு எந்த தலையிடும் இருக்கக் கூடாது என ஆளுநர் நினைக்கிறார் பல்கலைக்கழகம் முழுக்க மாநில அரசின் நிதியில் இயங்குகிறது நிர்வாக உரிமை மாநில அரசிடம் தான் இருக்க வேண்டும். இது மாநில சுயாட்சிக்கு எதிரானது நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் அனைத்து பல்கலைக்கழகத்தையும் கட்டுப்பாட்டை முழுமையாக கொண்டு வருவது ஆரோக்கியமான ஜனநாயக கிடையாது” எனக் கூறினார்.