வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்- ஐகோர்ட் கிளை

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால் விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க கோரிஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கை தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றி மாற்றி பேச என்ன காரணம்? என கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில், "பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டறியக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நபர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் தங்களை தூக்கிலிடுங்கள் என தெரிவிக்கின்றனர் எனவே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி கோபமடைந்து, ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் சம்பவத்தன்று காலை 7:30 முதல் 9:30 மணிக்குள் நடந்த விஷயங்கள் என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்து மின்னணு பதிவுகளையும் அறிவியல் பதிவுகளையும் நேற்று அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெளிவாக பதிவு செய்துள்ளார் மேலும் மொபைல் பதிவுகளில் உள்ளது. எதிர்ப்புக்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும். எனவே நீதிமன்றத்தை அரசியல் மேடையாக ஆக்க முயற்சிக்க வேண்டாம் என்றார். அப்பொழுது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி. இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோ என்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை மனுதாரர் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து வழக்கை நடத்தலாம் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவே இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது எனக் கூறி வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.