இவர்களை ஒப்பந்த முறைக்கு மாற்றாதீர்.. பணி நிலைப்பு செய்க - ராமதாஸ்..

 
 ராமதாஸ் வலியுறுத்தல்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்களை, பணி நிலைப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 2006ம் ஆண்டில் அமர்த்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றி வந்த ஏராளமானோர், அவர்களுக்கே தெரியாமல் குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இது நியாயமற்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றிய அவர்கள், தங்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும் என்று 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்கள் - தமிழ்நாடு அரசு

தினக்கூலி பணியாளர்களாக நீடித்தால் அவர்கள் பணி நிலைப்பு கோருவார்கள் என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. இது தினக்கூலி பணியாளர்களை உரிமையற்றவர்களாக மாற்றும் செயல் ஆகும். இச்செயல் இயற்கை நீதிக்கும் எதிரானது.  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தினக்கூலி பணியாளர்களை குத்தகை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றிய ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும். மாறாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றும் அவர்கள் அனைவரையும் அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.