தமிழகத்தில் அதிகரிக்கும் ‘ஸ்கரப் டைபஸ்’ தொற்று! எச்சரிக்கும் மருத்துவர்கள்
தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் ஸ்கரப் டைபஸ் ஏற்படும். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் ‘ஸ்கரப் டைபஸ்' நோயின் முக்கிய அறிகுறிகளாகும். 5 நாட்களுக்கு மேல் சிகிச்சை இருந்தால் IgM antibody, ELISA 2 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர் மண்டிய பகுதியில் இருப்போர் நோயால் பாதிக்கப்படலாம் என்றும் நோய்க்கு மருத்துவர் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் மருந்து தரப்படுவதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய நோயினால் பாதிக்கப்படுவோருக்கு மாவட்ட நிர்வாகம் உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் பொது சுகாதாரத்துறை கேட்டுகொண்டுள்ளது.