ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைப்பா? - உயர்நீதிமன்றம் காட்டம்..
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா? என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படதாதற்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு , மாநகராட்சி ஆணையரின் சம்பளத்தில் இருந்து அந்தத் தொகையை பிடித்தம் செய்து , அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், “ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டலாமா? என கட்டாமாக கேள்வியெழுப்பிய நீதிபதி, வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை படித்து பார்த்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர் ஆணையராக இருக்கவே தகுதியில்லாவர் என்று தெரிவித்தார். அத்துடன் நாளை நேரில் ஆஜராக வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.


