இனி மெரினா கடற்கரை செல்ல கட்டணமா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளாவது,
நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை தலைநகரின் முக்கியமான அடையாளம். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் எல்லாம் மெரினாவைப் பார்க்காமல் செல்வதில்லை. சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல், சென்னைக்கு வருகிறவர்களுக்கு சுற்றுலாத் தளமாகவும் இளைப்பாறும் இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது.
மெரினா கடற்கரையில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து கடல் அலைகளைப் பார்த்து கடற்கரையில் காற்று வாங்கி மகிழ்கின்றனர். மிக நீளமான அழகான கடற்கரையான மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வந்து செல்ல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்நிலையில்தான், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சிறிய பகுதிக்கு, பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதி விரைவில் அமலாக உள்ளது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. மேலும், நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.