திமுகவின் பலமே தொண்டர்கள்தான் - ஆர்.எஸ். பாரதி புகழாரம்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், தி.மு.க ராயபுரம் முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனியின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ”ஆட்சியில் இருந்தபோது எப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதோ, அதேபோல் தற்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நாங்கள் தேர்தலில் தோற்றது போலவே தெரியவில்லை.
இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை கலைந்து செல்லாமல் தொண்டர்கள் நிற்பதுதான் தி.மு.க-வின் பலம். 76 ஆண்டுகளாக இந்தக் கட்சி நிலைத்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள்தான்” என புகழாரம் சூட்டினார்.
தி.மு.க., எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது குறித்து மறைமுகமாக பேசிய அவர், “தற்போது தி.மு.க-வினர்கள் மீது வழக்குகளை போடுகிறார்கள்; கைது செய்திகிறார்கள். தி.மு.க-வுக்கு இதெல்லாம் புதிதல்ல. பழக்கப்பட்ட ஒன்றுதான். சிறைச்சாலையை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் எங்களுக்கு எந்த ஆபத்தும், கவலையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திங்கட்கிழமை (ஜூலை 20) மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில், ஆர்.எஸ். பாரதி இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பெரும் கோட்டை. அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் அந்தக் கோட்டையை பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றன. வெற்றியும், தோல்வியும் இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்த்ததில்லை.
திமுகவை அசைத்துப் பார்ப்பேன், ஆட்டிப் பார்ப்பேன், இல்லாமல் செய்வேன் என்று கூறியவர்கள் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இன்னும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்கள் இருப்பதால் திமுக இன்னும் நூறாண்டுகள் சிறப்பாக செயல்படும்” என கூறினார்.

