வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் பாஜகவின் அணிகள்- உதயநிதி ஸ்டாலின்

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் மாணவர் அணி, இளைஞரணி இருப்பது போல் பாஜகவின் அணியாக வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும் செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ள சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்னை சத்திய மூர்த்தி பவனிற்கு அமைச்சர் உதயநிதி நேரடியாக வருகை தந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்றார். தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை,முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கிருஷ்னசாமி, சிறுபான்மையின நலவாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் உதயநிதி கையெழுத்து வாங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையெழுத்திற்காக காத்திருக்கிறோம். தொடர்ந்து 6 வருடத்தில் நீட் தேர்வினால் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் நீட்தேர்விலிருந்து விலக்கு பெறப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதையொட்டி, நீட் தேர்வை ரத்து செய்வதற்காக திமுக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று, சேலத்தில் நடைபெறக்கூடிய இளைஞராணி மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளோம். மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகளை ஜனாதிபதியிடம் அனுப்புவது எங்களது இலக்கு. இணையதளம் வாயிலாகஇதுவரை மூன்று லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். போஸ்ட் கார்டு மூலமாக இதுவரை 8 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
இது திமுகவின் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த மாணவர்களின் உரிமைக்கான பிரச்சினை. அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து கையெழுத்து பெற உள்ளோம். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணி, இளைஞரணி என இருப்பது போல் பாஜகவின் அணியாக வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும் செயல்படுகிறது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக அந்த அணிகளின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. அவர்கள் செய்வதை சட்டப்படி எதிர்கொள்வோம்.
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து திமுக கூட்டணி உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து, நீட் தேர்வு விலக்குக்கான இயக்கத்தில் கையெழுத்து பெற உள்ளோம். மேலும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு பெற கையெழுத்து பெற உள்ளோம்” என்றார்.