அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் - ஆர்.எஸ்.பாரதி

 
rs

அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என  பலரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இந்த சூழலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு,  பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதுக்கு 48 மணி நேரம் கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கினோம். பதில் இல்லை. எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முதலில் கிரிமினல் வழக்கும்,  அதைத் தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்க உள்ளேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அவதூறு கருத்துக்களுக்கு அண்ணாமலை மன்னிப்பு கோராததால் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். ஒரு மாதம் அவகாசம் அளித்தும் வக்கீல் நோட்டிசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கவில்லை. இந்த அவதூறு வழக்கில் அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு கூறினார்.