தி.மு.க. ஆட்சி தமிழக வரலாற்றிலேயே மிக மோசமானது– அண்ணாமலை காட்டம்..!
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து, அண்ணாமலை பேசியதாவது:
ஒரு 'சிட்டிங்' மத்திய அமைச்சர் அவிநாசி தொகுதி வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டிருப்பது, மக்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.
அவிநாசி சட்டசபை தொகுதி என்பது, அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை. எனவே, சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து என தி.மு.க.,வினர் அளித்த எந்ததவொரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில், 8,008 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்;
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 2,080 என பதிவாகியுள்ளது. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் (போக்சோ), மட்டும் 39,900 ஆக உயர்ந்துள்ளது. இவ்வளவு குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், எந்த அடிப்படையில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என முதல்வர் கூறுகிறார் என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் மது விற்பனையை தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தி.மு.க. அரசு புதிதாக, 403 தனியார் பார் உரிமங்களை வழங்கியுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டத்தில் மட்டும், 110 எப்.எல்.2 பார் அனுமதி கொடுத்துள்ளனர். கடந்த, ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சி தான், தமிழக வரலாற்றில் மிக மோசமான ஒரு ஆட்சி. நுாறு நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியிருக்கிறது. அவிநாசி தொகுதியில் 'சிட்டிங்' அமைச்சரை ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். முருகன் வெற்றி பெற்றால், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, அதை முழுமைப்படுத்துவார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.



