"சில குறைகள் இருந்தாலும் திமுக ஆட்சி எல்லாவற்றிலும் சிறந்திருக்கிறது" - கே.பாலகிருஷ்ணன்

மதசார்பற்ற கூட்டணியை ஒருங்கிணைப்பது குறித்து முதலமைச்சருடன் விவாதித்தோம் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ.ராசா , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், மதசார்பற்ற கூட்டணி ஒருங்கிணைப்பது பற்றி முதலமைச்சருடன் யெச்சூரி விவாதித்தார் . இந்துத்துவா கோட்பாட்டை முறியடிக்க வேண்டும் என்பதே கர்நாடக தேர்தல் முடிவு காட்டுகிறது. கர்நாடக வெற்றி தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்றும் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் இடையே ஒரே ஒற்றுமை வருவது மிகவும் கடினம். மாநில சூழலுக்கு ஏற்ப கட்சிகளை ஒருங்கிணைத்தால் பாஜகவை வீழ்த்தலாம் என யெச்சூரி கூறினார்.
கள்ளச்சாராய உயிரிழப்பை ஒரு விபத்தாக தான் பார்க்க முடியும். எதையாவது சொல்லியாக வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யாதது ஏன்? ஒரு வார்த்தை பாஜகவை பற்றி பேச மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி .பாஜகவை வீழ்த்த வேண்டும் என நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் .சில குறைகள் இருந்தாலும் திமுக ஆட்சி எல்லாவற்றிலும் சிறந்திருக்கிறது என்றார்.