"சொரணை இருந்தால் ஆளுநர் இன்று இரவே ஊரை விட்டு செல்வது நல்லது"- ஆர்.எஸ்.பாரதி

பாஜக அல்லாத கட்சிகள் எங்கெல்லாம் ஆளுகிறதோ அவர்களெல்லாம் இனி ஆளுநரை வைத்து ஆட்டம் போட முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “லேண்ட்மார்க் ஜட்ஜ்மெண்ட் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டு நாளிலிருந்து சட்டமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில், அமையப்பட்ட இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியை விட மோசமாக செயல்பட்டு வந்தார். இந்த பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது சட்டப்படி குற்றம், ஆளுநர் தனது கடமையை தவறிவிட்டார் என்ற வகையில் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது.
ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாத 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருத்தபடும் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதருக்கு ஒரு சொல் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இன்று இரவே ஆளுநர் ராஜ் பவனை விட்டு புறப்பட்டால் ஒரு சுயமரியாதைக்காரர், அவருக்கு எல்லாம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் நீடிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுவரை இப்படி ஒரு தீர்ப்பு எந்த ஆளுநருக்கு வந்ததில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து எந்த ஆளுநருக்கு இப்படி ஒரு நிலை வந்ததில்லை. அவருக்கு சொரணை இருந்தால் அஞ்சு இன்று இரவே விமானத்தில் ஏறி ஊரை விட்டு செல்வது நல்லது. மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்று தான் அர்த்தம். பாஜக அல்லாத கட்சிகள் எங்கெல்லாம் ஆளுகிறதோ அவர்களெல்லாம் இனி ஆளுநரை வைத்து ஆட்டம் போட முடியாது” என்றார்.