திமுக எம்.பி.கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி..

திமுக எம்.பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரவிந்தனின் உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கேட்டு வருகிறார்.
தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. அக்கட்சியின் மகளிரணி செயலாளராகவும் இருந்தார். இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அரவிந்தனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். தற்போது அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அதாவது ஒரு வார காலத்துக்குள் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அவரது உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.