தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - கனிமொழி

 
kanimozhi

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு ஜன. 31 முதல் பிப்.13 வரை நடைபெற்ற நிலையில், 2ஆவது அமர்வு தொடங்கியது. 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கியது. அவை தொடங்கியதும் திமுகவினர் மும்மொழி கொள்கை விவகாரத்தை எழுப்பிய நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார்.  அப்போது தமிழக எம்.பிக்களை தர்மேந்திர பிரதான் நாகரீகமற்றவர்கள் என பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளரகளை திமுக எம்.பி கனிமொழி, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரை வலியுறுத்துவோம் என கூறினார்.