வாக்கு கேட்க வந்த கனிமொழியை வழிமறித்து நியாயம் காவலரின் மனைவி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விவசாயி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதாக காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து காவலரின் மனைவி கனிமொழியின் வாகனத்தில் ஏறி நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த ஏழாம் தேதி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜன் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு நடந்த அன்று துப்பாக்கி சூடு நடத்திய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் போராட்டம் நடத்தினர். இதில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ், ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜ் மற்றும் சஸ்பெண்டில் உள்ள காவலர் பிரபாகரன் உள்பட 226 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆலங்குளத்தில் கனிமொழி எம்பியிடம் பெண் வாக்குவாதம் pic.twitter.com/65Kow0ZIfC
— sandeep (@sandeepsharp2) April 12, 2026
இந்த நடவடிக்கைக்கு மருதம்புத்தூர் கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆலங்குளத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். கனிமொழி பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனின் மனைவி பிளஸ்சி என்பவர் கனிமொழி வாகனத்தில் ஏறி கணவர் மீது வழக்கு பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். கனிமொழி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பிளஸ்சியை கனிமொழியின் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறக்கினர். இதனையடுத்து அப்பெண்ணிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது நடந்த நிகழ்விற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கூறி சிலர் அங்கு வாக்குவாதம் செய்தனர். காவல்துறையினர் அந்தப் பெண்ணை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.



